Saturday, December 27, 2008

அப்பாவி இலங்கைத் தமிழர்க்ள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்


அப்பாவி இலங்கைத் தமிழர்க்ள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

நாள் :24.10.2008, வெள்ளி, மாலை 0600 மணி
இடம் :இலங்கை தமிழ்த்தியாகிகள் நினைவு அரங்கம், கூடல்நகர் (மிர்காப்)

குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து, இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள் இனவெறி அரசு நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டம் “இலங்கை தமிழ் தியாகிகள் அரங்கில்” நடந்தது.

இக்கூட்டத்திற்கு குவைத் இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் அமைப்பாளர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தலைமையேற்க, தமிழர் சமூகநீதி பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன், விடுதலைச் சிறுத்தைகளின் இணைச் செயலாளர் அழ.பாண்டிச்செல்வன், தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கும், தமிழ் தியாகிகளுக்கும் அஞ்சலி தெரிவித்து ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழர் சமூகநீதி பேரவையின் தலைவர் தமிழ்நாடன் அவர்கள் தொடக்க உரையாற்றி கண்டனக் கூட்டத்தை தொடங்கி வைத்ததோடு, நிகழ்வினை தொகுத்து வழங்கினார்கள்.

அடுத்ததாக பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகிகள் தங்களது கண்டன உரையை பதிவு செய்தார்கள்.

முதலாவதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் குவைத் அமைப்பாளர் தோழர்.முகமது இக்பால் அவர்களும், அடுத்ததாக பெரியார் நூலகம் சார்பில் அதன் அமைப்பாளர் தோழர்.செல்லப்பெருமாள் அவர்களும், தொடர்ந்து, பெரியாரியலாளர் தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

அடுத்ததாக முன்னிலை வகித்த விடுதலை சிறுத்தைகளின் இணைச் செயலாளர் தோழர்.அழ.பாண்டிச்செல்வம் அவர்கள் கண்டண உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, பாலைக்குயில்கள் கவிஞர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் வளநாடன் அவர்களும், தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர். இரா.க.சரவணன் அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் சார்பில் அதன் பொருளாளர் தோழர். அறிவழகன் அவர்களும், தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் அவர்களும், தமிழ் இசுலாமிய மாணவர் பேரவையின் தலைவர் க.இரகமத்துல்லா அவர்களும் கண்டன உரையாற்றினர்.

அடுத்ததாக, இக்கண்டனக் கூட்டத்தின் தீர்மானங்களை தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் முன்மொழிந்தார்கள்.

இதைத் தொடர்ந்து, திட்டமிட்ட நிகழ்ச்சிகள் முடிவடைந்து தலைமையுரை தொடங்க வேண்டிய நிலையில் கூட்டத்தில் பங்கு கொண்ட தோழர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய விழைந்ததால் கண்டன உரைகள் தொடர்ந்தன.

முதலாவதாக, தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் தனது கண்டன உரையை பதிவு செய்தார்கள். அடுத்ததாக, தோழர்.நெல்லை முத்துவேல் அவர்கள் தனது கண்டனக் கவிதை வாசித்தார்கள்.

அதையடுத்து, சிங்கள இனவெறி அரசிற்கு இந்தியா அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டுமெனவும், தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஆவண செய்ய வேண்டுமெனவும் கோரும் “இந்திய அரசுக்கு குவைத் வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள்” விடுக்கும் கையெழுத்து இயக்கத்தை தோழர்.இராசு பூபதி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, தமிழோசை கவிஞர் மன்றத்தின் தலைவர் தோழர். சாதிக் பாட்சா அவர்களும், தமிழர் சமூகநீதி பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் அவர்களும் தங்களது கண்டன உரையினை நிகழ்த்த தோழர்.சிவமணி அவர்கள் தனது கண்டனக் கவிதையை வாசித்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக கண்டனக் கூட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றி, கூட்டத் தலைவர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தனது தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் போது, ஈழத் தமிழர்கள் போரினால் பாதிக்கப்படதை விளக்கும் படங்கள் அரங்கத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அதே போன்று போரினால் ஏற்பட்ட பதிப்புக்களை விளக்கும் குறுந்தகடு ஒன்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இன்றைய கண்டனக் கூட்டத்தின் தீர்மாங்களும், கையெழுத்து இயக்க படிகளும் அ.நா சபைக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், தமிழக அரசு, ஊடகங்கள் பிற அனைத்துலக அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்போடு கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டமனது, குவைத்தில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் முதன் முறையாக ஒன்றிணைந்து நடத்தினர். அவ்வமைப்பினரும், பொது மக்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த இன உணர்வோடு கலந்து கொண்டதோடு, சிங்கள இனவெறி தாக்குதல்களை கண்டித்ததோடு, இந்தியா செய்து வரும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டுமெனவும், தமிழகத்தில் அரசியல் கட்சியினரும் பிற இயங்கங்களும் ஒத்தக் கருத்தோடு ஈழப் போராட்டம் வெற்றி பெரும் வரை தொடர்ந்து போராடி, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


தீர்மானங்கள்:

இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்கள் மீது தொடர்ந்து கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருவதோடு, உணவுப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் அளிக்க மறுப்பதோடு, செஞ்சிலுவை சங்கம், அய்க்கியநாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புக்கள், பிற நாடுகளின் உதவியையும் கூட தமிழர்கள் பகுதிக்கு அனுப்பாமல் தங்கள் நாட்டின் குடிமக்களையே அழித்து வரும் “சிங்கள இன வெறி” அரசை வன்மையாக கண்டிப்பதோடு, அவர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வலியுறுத்துகிறோம். தமிழர்கள் பகுதியில் வாழ்ந்துவரும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான உணவு பொருட்களை அனுப்பியும், மருத்துவ உதவிகளை செய்தும் அவர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்துகிறோம்.

1983ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியைப் போன்று, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுவரும் எழுச்சிக்கு காரண்மான, தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் அதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து தங்கள் இன உணர்வினை வெளிப்படுத்தி வரும் வழக்குறைஞர்கள், மாணவர்கள், திரைத்துறையினர், மருத்துவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எங்களின் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தொடக்கம் முதலே தமிழ்ர்களுக்கு எதிராகவும், இலங்கை சிங்கள இனவெறி அரசிற்கு ஆதரவாகவும் பேசியும் செயல்பட்டும் வருகிற பார்ப்பன கும்பல்களான இந்து ராம், செயலலிதா, துக்ளக் சோ, சுப்பிரமணியசாமி ஆகியோரை கண்டிப்பதோடு, ஈழத்தமிழர்களின் போராட்டங்களை இழித்தும், கொச்சைப்படுத்தியும் பேசி வருகிற பார்ப்பன அடிவருடி தமிழர்கள், இந்தியர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

அண்டை நாடுகளில் நடைபெறும் உரிமை மீறல்கள், இராணுவ நடவடிக்கைகள், பிற நாடுகளுடணான உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய கடமையும், இந்திய துணைக்கண்ட பிரதேசத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டிய கடமையும், இந்தியத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும், அமைதியான வாழ்வும், மனித உரிமைகள் காக்கப்பட வேண்டிய கடமையும் இந்தியவிற்கு உண்டு. எனவே, இதற்கான முன்முயற்சியினை மேற்கொண்டு இலங்கையில் அமைதி நிலவவும், இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும் பதுகப்புடனும் வாழ வழிசெய்யுமாறு இந்திய அரசாங்கத்தினை இத்தீர்மானம் கேட்டுக்கொள்வதோடு, இலங்கைக்கு அளித்துவரும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்தக் கோருகிறோம்.

இந்திய இலங்கை இடையிலான கடற்பகுதியில் மீன்பிடித்துவரும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி, கொலை செய்வதும், கைது செய்வதையும் இலங்கை நிறுத்த வேண்டும். இம்மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தி வரும் அத்துமீறல்களை தடுத்துப்பதோடு, இவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து இக்கடற்பகுதிகளில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய ஒப்பத்தங்களை இலங்கை அரசுடன் ஏற்படுத்த வேண்டுமென்றும் இந்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய அரசு, அய்க்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம், பிற உதவி செய்யும் நாடுகள் ஆகிய அனைவரும் ஒருமித்த குரலில், தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோருவதோடு, இலங்கைக்கு அளித்துவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.


(இந்நிகழ்வு பற்றிய செய்தி தமீழீழ வானொலியில் 27.10.08 அன்று ஒலிபரப்பப் பட்டது(புலிகளில் குரல் இணையதளத்தில் கேட்கலாம்). அதே போன்று பல்வேறு இணையதளங்களிலும் தினகுரல் நாளிதழிலும் வெளிவந்தது).

பேராசிரியர்.பெரியார்தாசன், தோழர்.அழகரசன் நிகழ்ச்சி


பெரியார் திராவிடர் கழக தலைவர்கள் தோழர்.பேரா.பெரியார்தாசன் அவர்களும், தோழர்.கடலூர் அழகரசன் அவர்களும் அண்மையில் குவைத்திற்கு வருகைபுரிந்தனர்.
தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் அழைப்பின் பேரில் தோழர்.பெரியார்தாசனும், அவரோடு இணைந்து சொந்த விருப்பத்தின் பேரிலும், தோழர்.வடலூர் ஆறுமுகத்தின் ஆதரவிலும் தோழர்.அழகரசனும் வந்திருந்தனர். இப்பயணத்தின் போது இவர்களிருவரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், தமிழோசை கவிஞர் மன்றம், பெரியார் நூலகம், மற்றும் நமது தமிழர் சமூகநீதி பேரவையின் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
01.09.08 அன்று மாலை குவைத் வந்தடைந்த இவர்களை இவ்வமைப்பினர் அனைவரும் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
02.09.08 அன்று தமிழ்நாடு பொறியாளர் குழும நிகழ்ச்சியிலும்,
03.09.08 அன்று காலை தமிழோசை கவிஞர் மன்ற கூட்டத்திலும் பங்கேற்றப்பின்னர்,
03.09.08 அன்று வெள்ளிக்கிழமை மாலை, மிர்காப் தஞ்சை உணவகத்தில் தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தினை தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் பாடினார். இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் வரவேற்றார்.
இதையடுத்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் "இணைந்தோம் உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்" என்ற பாடலை பாடினார். அடுத்ததாக, முன்னிலை வகித்த தோழர். வளநாடன் அவர்கள் உரையாற்றினார், பின்னர் தோழர்.சுப்பிரமணியன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார்.
அவரைத் தொடர்ந்து தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்கள் உரையாற்ற, தோழர். இராமகிருட்டிணன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார். இதையடுத்து தொழர்.சரவணன் அவர்கள் தான் இயற்றிய பெரியார் பற்றிய கவிதயை படித்தப் பின்னர் தலைமையுரையாற்றினார்கள்.
அதயடுத்து, பொறியாளர் முத்துக்குமார் அவர்கள் த.ச.பேரவையின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005 என்ற தமிழக அரசால் வெளியிடப்பட்ட கையேட்டினை வெளியிட தோழர்கள் பெரியார்தாசனும் அழகரசனும் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து தோழர்.கடலூர்.அழகரசன் அவர்கள் உரையாற்றினார்கள். அடுத்து தோழர்.செந்தில்குமார் ஒரு எழுச்சிப் பாடலை பாடினார். நிறைவாக தோழர்.பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் உரையாற்றினார்கள்.
அடித்ததாக, விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. தோழர்கள் .தமிழ்நாடன், அனவர் அலி, இரா.க.சரவணன், நாஞ்சில் சுரேசு ஆகியோர் தொழர்கள். அழகரசன், பெரியார்தாசன் இருவருக்கும் நினைவுப்பரிசினை வழங்கினர். இதயடுத்து, இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் சார்பில் அதன் அமைப்பாளர் தோழர். மரு.அன்வர் பாட்சா அவர்களும், தோழர்.முபாரக் ரசுவி அவர்களும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர்.
தமிழ்.காம் இதழின் சார்பில் தோழர். லுக்மான் அவர்கள் பேரா.பெரியார்தாசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்கள்.
ஓவியர். கொண்டல்ராசு அவர்கள், நிகழ்ச்சியினிடையே தோழர் அழகரசன் அவர்களை ஓவியமாக வரைந்து பரிசளித்தார்கள்.
விருந்தினர்களோடு அனவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, இரவு உணவையும் முடிக்க, விழா இனிதே நிறைவுற்றது.

பெரியார் பிறந்தநாள் விழா தீர்மானங்கள்

தீர்மானங்கள்:

பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, உலகில் அனைவரும் பயன்பெற வழிவகை செய்ய தமிழக அரசினை வலியுருத்துகிறோம்.

பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தமிழக அரசின் சார்பில் தொகுத்து ஒரே தொகுப்பாக வெளியிட்டு, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நூலகங்களில் வைக்கப்பட வேண்டும். இத்தொகுப்பின் மலிவு விலையில் வெளியிடுவதோடு மின்னூல் வடிவத்திலும் வெளியிடவேண்டும்.

பெரியார் பயன்படுத்திய உடைமைகள் அனைத்தையும் அரசு தன் பொறுப்பில் எடுத்து, தனி ஒரு கண்காட்சி கூடமும் நினைவகமும் ஏற்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

மதசார்பற்ற அரசு சனநாயக அரசு என்றெல்லாம் கூறிக்கொள்ளும் இந்தியாவில், தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும், சிறுபான்மையினரின் வாழ்விற்கான அச்சுறுத்தல்கள் தொடர்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சாதாரன, சிறுபான்மை, பிந்தங்கிய மக்களுக்கு எதிரான கொடுமைகளை நாட்டின் முதன்மைப் பிரச்சனையாக கருதி குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நேரடியாக தலையிட்டு அம்மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யவேண்டும். அவர்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்பை ஈடுகட்டுவதோடு அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்மொழி மீட்டுருவாக்கம், தமிழர் நலம், தமிழர் பண்பாடு போன்றவற்றை முன்னிருத்தி பிற தொலைக்காட்சிகளைப் போன்று தமிழர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லாமல், மண் பயனுற வேண்டும் என்ற நோக்கிலே தொடர்ந்து செயல்பட்டு வரும் மக்கள் தொலைக்காட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றதை பாராட்டுகிறோம். அதே வேளையில், எந்த நிலையிலும் தனது நோக்கத்திலும் செயலிலும் எவ்வித குறைபாடுகளுக்கும் இடம் தராமல், தவறுகள் குறைபாடுகள் ஏற்படின் அவற்றை களைந்து தொடர்ந்து செயல்பட வலியுருத்துகிறோம்.

தமிழர் சமூகநீதி பேரவையின் சின்னம்


Tuesday, November 4, 2008

பெரியார் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம்


தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா 06.09.08 அன்று "சமூகநீதி போராளி தந்தை பெரியார்" அரங்கில் (இந்தியன் முகலாய் உணவகம், பாகீல்) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

த.ச.பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன் வரவேற்புரை ஆற்றினார்கள். எழுத்தாளர் வளநாடன் தலைமையேற்க, த.ச.பேரவையின் இணைச்செயலாளர் க.இரகமத்துல்லா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக நிலவனும் பட்டுக்கோட்டை சத்யாவும் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அதைத் தொடர்ந்து, க.இரகமத்துல்லா அவர்கள் த.ச.பேரவையின் சின்னத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.

அவரைத்தொடர்ந்து வடலூர் ஆறுமுகம் அவர்கள் பெரியார் சிறப்புக்களை விளக்கும் விதமாக உரையாற்றினார்.

அடுத்ததாக, இரா.க.சரவணன் அவர்கள் த.ச.பேரவையின் கொள்கை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு உரையாற்றினார். கொள்கை விளக்க கையேட்டினை பெற்றுக் கொண்டு பேராசிரியர். தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்.

அடுத்ததாக இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
பிறகு, உமைரி நாசர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழக தலைவருமாகிய பேராசிரியர், முனைவர். சவாகிருல்லா அவர்களுக்கு த.ச.பேரவையின் தலைவர் தமிழ்நாடன், புலவர்.கருணனந்தம் எழுதிய பெரியார் வரலாற்று நூலை நினைவுப் பரிசாக அளித்தார்கள்.

அதைத் தொடர்ந்து சமூகநீதிக் காவலர் பெரியார் என்ற தொகுப்பு நூலை த.ச.பேரவையின் அவைத் தலைவர் அன்வர் அலி வெளியிட, பேரா.முனை. சவாகிருல்லா பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

விழா நிறைவாக த.ச.பேரவையின் பொருளாளர் நாஞ்சில் சுரேசு நன்றியுரை ஆற்றினார்.

முன்னதாக த.ச.பேரவையின் துணைத்தலைவர் வயி.பி.மதியழகன் சிற்றிதழ்கள் கண்காட்சியினையும், த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் பெரியார் ஆவணக் கண்காட்சியினையும் திறந்து வைத்தனர்.
இக்கண்காட்சியில் ஏராளமான சிற்றிதழ்களும், பெரியார் நூல்களும், பெரியார் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

விழாவினை நிலவன் சிறப்பாக தொகுத்தளிக்க இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : பேரா.முனை.சாவாகிருல்லா உரையும், கண்காட்சி விபரங்களும் தனியே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 4, 2008

சிறப்புக்கருத்தரங்கம் - 06.09.08


பேராசிரியர், முனைவர்.ஜவாகிருல்லா கலந்துகொள்ளும் சிறப்புக்கருத்தரங்கம் 06.09.08 அன்று நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்.

Friday, August 8, 2008

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்க தீர்மானங்கள்

தீர்மானங்கள்

முதல் அமர்வு: மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்

ஆங்கிலேய அரசை அவர்களிருந்த கோட்டைக்குள்ளேயே எதிர்த்து புரட்சி விதையை விடுதலை உணர்வை முதன் முதலாக விதைத்த “வேலூர் புரட்சியை” தமிழகத்தில் நடைபெற்ற பிற விடுதலைப் போரை போன்றே வரலாற்றில் இரட்டடிப்பு செய்யப்படுள்ளதை மாற்றி முறையான வரலாற்றுப் பதிவை செய்திட ஆவண செய்யுமாறு மைய மாநில அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே உலகத்தினருக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டய் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் புரட்சியாளர் “உலக சமூகநீதி காவலர்” நெல்சன் மண்டேலா அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழாவில் அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டாம் அமர்வு: கல்வி முறையும் களவு போகும் உரிமையும், தமிழ் மொழி மீட்டுருவாக்கம்

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தும் தமிழ் வழி மருத்துவப் பாட திட்டங்களையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முயற்சியில் செயலுக்குவரும் தமிழ் வழி பொறியியல் பாடத்திட்டத்தினையும் ஆதரித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழக தகுதியை தந்து கல்வியை வியாபார தொழிலாக்குவதை கண்டித்தும், அரசே மாவட்டத்தோறும் பல்கலைக்கழகங்களை உருவாக்கிட வலியுருத்தியும் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

காமராசரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர் கொண்டுவந்த சென்னை அய்.அய்.டி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அவர் கண்ட கனவை நிறைவேற்றிடும் வகையில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியும் மைய, மாநில அரசை வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொதுத் தீர்மானங்கள்:

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கண்முடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்துவதையும், கொலை செய்வதையும் கண்டிப்பதோடு, தமிழக அரசும், நடுவண் அரசும் தக்க நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை காத்திட வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நடைபெற்ற கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மை நிலையினை மக்கள் முன் விளக்கி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தையும் ஓட்டெடுப்பும் நடத்திய பிறகே மேல்நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் முயற்சியால் தரமான இலவச பொதுக்கல்வியையும் தொழிற்கல்வியையும் வழங்கவும் நூலகம் ஆயவகம் உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்ட “பெரியார் ஈ.வே.இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை”யை வாழ்த்துவதோடு அதன் வளர்ச்சியில் பங்குபெறும் விதமாக அறக்கட்டளை வளர்ச்சி நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டி தருவதாகவும் முடிவு செய்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்கம்

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்தமிழ் மொழி மீட்டுருவாக்கம்கல்வி முறை - களவுபோகும் உரிமைசிறப்புக்கருத்தரங்கம் த.ச.பேரவையின் அய்ந்தாவது சிறப்புக்கருத்தரங்கம் கல்வி போராளி காமராசர் அரங்கில் த.ச.பேரவையின் பொருளாலர் நாஞ்சில் சுரேசு வரவேற்புரையோடு துவங்கிற்று.
த.ச.பேரவையின்பொதுச்செயலாளர் இரா.க.சரவணன் தலைமையேற்க, பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினரும் து.செயலாளருமாகிய அன்வர் அலி முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் தொடக்கமாக தோழர் நிலவனும் தொழர் பட்டுக்கோட்டை சத்யாவும் தமிழ்தாய் வாழ்துப்பாடினர். அதைத் தொடர்ந்து முதல் அமர்வான மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் துவக்கமாக தோழர் செந்தில் குமார் "இணைந்தோம் உலகத் தமிழராய் இணைந்தோம் என்ற உலகத் தமிழர் பண் பாடினார்.

த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் என்ற தலைப்பில் எழுச்சிமிக்க உரையைத் தொடர்ந்து த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் உலகபோராளி நெல்சன் மண்டேலா என்ற தலைப்பில்எழுச்சிமிக்க கவிதை படித்தார்.

இதையடுத்து த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். கி. திருமுருகன் "தில்லைச் சமரில் வென்றது தமிழ்" என்ற கையேட்டினை வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் தோழர். அழ.பாண்டிச்செல்வம் பெற்றுக் கொண்டார்கள்.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர். மணிவாசகம் அவர்கள் படிக்க அரங்கத்தின் பலத்த கரவொலியோடு நிறைவேற்றபட்டது.முதல் அமைவை நிறைவு செய்யும் விதமாகவும் இரண்டாம் அமர்வை தொடங்கும் விதமாகவும் தோழர் செந்தில் குமார் எழுச்சி மிக்க பாடலை பாடினார்கள்.

அதை தொடர்ந்து தோழர் பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் என்ற தலைப்பில்சீரிய உரையாற்றினார்கள். தமது உரையின் போது தமிழ் மொழி சிறக்கவும், தமிழ் மொழி சிறக்கவும் தமிழை மீட்டுருவாக்கம் செய்யவும் மறைமலையடிகள், செய்குத்தம்பி பாவலர், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆற்றிய தொண்டினையும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும் எடுத்துக் கூறினார்கள்.

தோழர் செந்தில்குமாரின் எழுச்சி மிக பாடலைத் தொடர்ந்துகருத்தரங்க வெளியீடாக தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பை த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். அப்துல் கனிவெளியிட இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் அமைப்பாளர்மருத்துவர் அன்வர் பாசா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

அடுத்துப் பேச வந்த த.ச.பேரவையின் தலைவர் தோழர் தமிழ்நாடன் அவர்கள் "கல்வி முறையும் களவு போகும் உரிமையும்" என்றதலைப்பில் இன்றைய கல்வி முறையின் சீர்கேட்டினையும், அதனை மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியத்தையும்எடுத்துக் கூறியதோடு தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தையும் விளக்கிக் கூறினார்கள்.

இக்கருத்தரங்கத்தின் சிறப்புரை நிகழ்த்திய இந்திய யூனியன் முசுலிம் லீக்கின்அமைப்பாளர் தோழர். அன்வர் பாசா அவர்கள், காமராசர்அவர்கள் தமிழகத்திற்கும் தமிழர்களின் கல்விக்கும் ஆற்றியதொண்டினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.

இதையடுத்து தோழர் வித்யாசாகர் அவர்கள் பழங்குடிமக்களின் வாழ்வையும் வேதனைகளையும் தனது கவிதயின்மூலம் வெளிப்படுத்தினார்கள்.
இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை தோழர். நிலவன் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி நிறைவேற்றினர்.

இரண்டாம் அமர்வின் நிறைவாக தோழர் செந்திகுமார் அவர்கள்எழுச்சிமிகு பாடலை பாடினார்கள்.

நிறைவாக தோழர். இரா.க.சரவணன் கருத்தரங்கத்தின் பொதுத்தீர்மானங்களை நிறைவேற்றி, கறுப்பு சூலை, அணுசக்தி உடன்பாடு உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளை குறித்து சிறப்புர விளக்கி தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிற்றுண்டியும் கருத்தரங்க வெளியீடுகளும்வழங்கப்பட்டது.

தோழர் அன்வர் அலியின் நன்றியுரையோடு நிகழ்ச்சிகள் இனிதேநிறைவுற்றது.

Monday, July 14, 2008

சிந்தனையாளனில் தமிழர் சமூகநீதி பேரவை நிகழ்ச்சி தொகுப்பு


நன்றி : சிந்தனையாளன் சூலை -2008

பெரியாரியல் அறிஞர் தோழர்.வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "சிந்தனையாளன்" சூலை-2008 இதழில் தமிழர் சமூகநீதி பேரவையின் முதல் மூன்று கருத்தரங்கங்களின் நிகழ்ச்சி தொகுப்பை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Tuesday, July 1, 2008

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் - ஒரு வரலாற்றுப் பார்வை - சிறப்புக்கருத்தரங்கம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை

இடம் : எல்லைப்போராளி ம.பொ.சி. அரங்கம்
நாள் : ஆடவை திங்கள் 13ம் நாள் (27.06.2008)

தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் “உலக சுற்றுச்சூழல் நாள்”, ம.பொ.சி நூற்றாண்டு, உ.வே.சா., தியாகி விசுவநாத தாசு, காயிதே மில்லத், கக்கன் ஆகியோரின் பிறந்தநாள், பெருஞ்சித்தரனார் நினைவு நாள், நெல்ல எழுச்சியின் நூற்றாண்டு ஆகியவற்றை நினைவுகூறும் விதமாக, “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற சிறப்புக் கருத்தரங்கத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று, கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்க த.ச.பேரவையின் து.செயலர் தோழர் நிலவன் அவர்களையும் முன்னிலை வகிக்க த.ச.பேரவையின் ஆலோசகர் தோழர்.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்களையும், சிறப்பு அழைப்பாளராகவும் கருத்தரங்கத்திற்கு சிறப்புரையாற்றவும் பொறிஞர்.இளங்கோவன் அவர்களையும் மேடைக்கு அழைத்தார் த.ச.பேரவையின் தலைவர் தோழர்.தமிழ்நாடன் அவர்கள்.

தலைமையேற்ற தோழர் நிலவன் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கத்தையும், அரங்கில் ஒட்டப்பட்டிருந்த தமிழ்த்தலைவர்களின் சிறப்புக்களையும் கூறி முதல் அமர்வின் முதல் பேச்சாளராகப் பேச த.ச.பேரவையின் து.தலைவர் தோழர் வயி.பி.மதியழகன் அவர்களை அழைத்தார்கள்.

தோழர் வயி.பி.மதியழகன் தனது உரையில், ஊமைத்துரையின் போராட்ட வரலாற்றைக் கூறி அவை இந்திய விடுதலைபோரில் அவை சரியாகப் பதிவு செய்யப்படாததையும், அதற்கு தமிழர்களும், தமிழக அரசும் முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். அடுத்து வ.உ.சியின் ஆங்கில அரசு எதிப்பு போராட்டத்தினையும் தியாகி விசுவநாத தாசின் சிறப்புக்களையும் விரிவாக எடுத்துக் கூறி இச்செய்திகளை பகிர்ந்து கொள்வதின் நோக்கத்தையும், அவற்றை நாம் உள்வாங்கி செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கூறி விடைபெற்றார்கள்.

இதைத் தொடர்ந்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இயற்றிய "உலகத் தமிழர் பண்" பாடலை எழுச்சியோடு பாடினார்கள்.

அடுத்த பேச வந்த த.ச.பேரவையின் பொ.செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் அவர்கள், ம.பொ.சியின் எல்லைப் போராட்டத்தையும் கக்கன் அவர்களின் தூய்மையான அரசியல் வாழ்வினையும் விளக்கிக் கூறினார்கள்.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் தமிழ்ப்பணிகளையும், அரசியல் சிறப்புக்களையும் த.ச.பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். அமானுல்லா அவர்கள் தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.

அரசியல் ஆளுமைகள் குறித்த கையேட்டினை த.ச.பேரவையின் பொருளாலர் தோழர்.நாஞ்சில் சுரேசு அவர்கள் வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் தோழர்.அன்பரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இதையடுத்து தோழர்.இராமகிருட்டினன் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட, தோழர். பழ.கிருட்டிணமூர்த்தியின் முன்னிலை உரையோடு முதல் அமர்வு நிறைவுற்றது.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர்.இரா.க.சரவணன் அவர்கள் படிக்க பலத்த கரவொலி எழுப்பி அரங்கத்தினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றினர்.
அரசியல் ஆளுமைகள் ஒரு வரலாற்றுப்பார்வை அமர்வின் தீர்மானங்கள்:
1. தமிழகத்தின் பரவலான இடங்களில் வரலாற்று ஆளுமைகளுக்கு
மணிமண்டபங்கள் எழுப்பி அவற்றுள் நூலகங்கள், உடற்பயிற்ச்சிக்கூடம்,
கண்காட்சிக்கூடங்களை ஏற்படுத்தி அவைகளை இளம் தலைமுறை
பயனுறும் விதமாக சமுதாய நலக்கூடங்களாக உருவாக்க வேண்டும்.

2. வரலாற்று நாயகர்களின் பணிகளையும் சிறப்பியல்களையும் உள்ளடக்கிய
வாழக்கை வரலாற்று நூல்களை தமிழக அரசின் சார்பில் வெளியிட்டு,
தமிழர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும். இவற்றை
மென்னூலாக்கி இணைதளத்திலும் வெளியிட தமிழக அரசினை வலியுருத்துகிறோம்.

3. தமிழ் மொழி இனப் போராளிகளின் பெயரில் அனைத்து பள்ளி,
கல்லூரிகளிலும் சிறப்பு மையங்களை ஏற்படுத்தி பேச்சுப் போட்டி,
கட்டுரைப்போட்டிகள் போன்றவற்றை ஆண்டுதோறும் நடத்தி
பரிசுகள் வழங்கி மாணவர்களிடத்தில் மொழி, இன உணர்வை
வளர்க்க தமிழக அரசினை இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

4. வறிய நிலையில் வாடும் தமிழறிஞர்கள், மொழிப்போராளிகளின்
குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
எண்ணிக்கைக்கேற்ப திங்கள் தோறும் உரூபா. 10, 000/ மும்
அதற்கு மேலும் தமிழக அரசு வங்கவேண்டும். அதே போன்று
இவர்களின் மருத்துவ செலவுகளையும் கல்விச் செலவுகளையும்,
வேலை வாய்பினையும் வழங்க வேண்டுமாய் தமிழக அரசினை
வலியுருத்துகிறோம்.

5.கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வினையும், எரிபொருள்
உயர்வினையும் கட்டுப்படித்தி ஏழைகளின் குறைந்த அளவு வாழ்வியல்
தேவைகளை உறுதிப்படுத்திட வேண்டுமாய் மைய மாநில அரசினை
வலியுறுத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


இரண்டாம் அமர்வின் தொடக்கமாக "Hell for leather" என்ற ஆவணப்படத்தை தோழர்.சித்தார்த் அவர்கள் திரையிட்டு அது கூறும் சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளையும், அதன் பாதிப்புக்களையும் விளக்கி "யாதும் ஊரே, யாதும் கேளீர்" என்ற மொழியக் கேட்டுக்கொண்ட தேவதேவனையும் மேற்கோள் காட்டினார்கள்.

இதையடுத்து சுற்றுச்சூழல் குறித்த கையேட்டினை தோழர்.தமிழ்நாடன் வெளியிட பொறிஞர்.இளங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தோழர்.சுகந்த் பிரியதாசன் அவர்களின் கவிதையைத் தொடர்ந்து,பேச வந்த தோழர்.தமிழ்நாடன் அவர்கள், சுற்றுச்சூழல் தினம் அய்க்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத் துறையின் சார்பாக கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், அது சார்ந்து செயல்படும் தமிழர்களை அறிமுகப்படுத்தி அதே போன்று நாம் அனைவரும் செயல்படக் கேட்டுக்கொண்டார்கள். அதையடுத்து சுற்றுச்சூழல்நாள் உறுதிமொழியினை படிக்க அரங்கத்தினர் அனைவரும் உடன் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கும் வழிமுறைகளையும் கூறி தனது உரையை முடித்துக்கொள்ள, இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை த.ச.பேரவையின் து.பொருளாலரும், செயற்குழு உறுப்பினருமான தோழர். முனு.சிவசங்கரன் அவர்கள் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி தீர்மானங்களை ஆதரித்தனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமர்வின் தீர்மானங்கள்:
1. தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டினை குறைத்தும், சுற்றுச்சூழல்
மாசுபடுத்தும் காரணிகளை தடுத்தும் வளமான எதிர்காலத்தை
உருவாக்கப் பாடுபடுவோம்.

2. மரம் வளர்க்கவும், காடு, மலை, ஆறுகள் உள்ளிட்ட இயற்கை
வளங்களைப் பேணிப் பாதுகாக்கவும் உறுதியெடுப்போம்.

3. மரபுசாரா எரிசக்திகளான சூரியஒளி, காற்று, சாண எரிவாயு
போன்றவற்றை இயன்ற அளவில் அதிகமாக பயன்படுத்த
உறுதி ஏற்ப்போம்.

4. தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் பணிகளைச் செய்திட
உறுதியெடுப்போம்.

5. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடும் அனைத்து
நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவோம்.

நிறைவாக சிறப்புரையாற்ற வந்த பொறிஞர். இளங்கோவன் அவர்கள், தமிழர் சமூகநீதி பேரவையின் செயல்பாடுகளைப் பாராட்டி அது செயல்பட வேண்டியப் பாதையையும், அதற்கான தேவையையும் கூறினார்கள். அதே போன்று இன்றைய நிகழ்வினையும் விரிவாக ஆய்ந்து அதன் சிறப்புக்களைக்கூறி அதற்காக தமது பாராட்டுதலையும் ஆதரவினையும் வழங்கினார்கள். தனது உரையின் போது தமிழகத்தில் கல்விக்கென வாடும் ஏழைச்சிறுவர்களுக்கு தாம் செய்து வரும் தொண்டினையும், அதைக் கண்டு பெரும் எண்ணிக்கையிலான நண்பர்கள் தங்களது பொருளுதவினை நல்கி ஆதரிப்பதையும் கூறி, தமிழ்ச்சமூகம் இன்றளவும் பெரும் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் அதற்கென வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்ற தமிழர்கள் உதவிட வேண்டியதன் அவசியத்தைகூறி அதற்காக தாம் ஒரு பாலமாக இருந்து செயல்படப் போவதாகவும் கூறினார்கள்.

கருத்தரங்க வெளியீடுகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தோழர்.செந்திகுமார் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட அனைவருக்கும் சிற்றுண்டி பறிமாறியபின் தோழர்.நாஞ்சில் சுரேசு நன்றி உரையாற்ற
விழா இனிதே நிறைவுற்றது.

Sunday, April 27, 2008

மறுக்கப்படும் தமிழர் உரிமை (புகைக்கல் குடிநீர் திட்டம்) - கருத்தரங்கம்

தமிழர் சமூகநீதி பேரவையின் மூன்றாவது சிறப்புக்கருத்தரங்கமாகிய "மறுக்கப்படும் தமிழர் உரிமை" புகைக்கல் குடிநீர் திட்டத்திறக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து 24-04-2008 அன்று "பாவேந்தர்" அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது கூட்டத்திற்கு வந்திருந்தோரை த.ச.பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர்.அமானுல்லா வரவேற்க, விடுதலை சிறுத்தைகள் பொருலாளர் தோழர்.அறிவழகன் முன்னிலையில், த.ச.பேரவையின் பொதுச்செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் தலைமையேற்று நடத்தினார்கள்.

இச்சிறப்புக்கருத்தரங்கத்திற்கு முன்னிலை வகித்த தோழர்.அறிவழகன், காவிரிப் பிரச்சனையில் நாம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக த.ச.பேரவையின் து.தலைவர் தோழர்.வயி.பி.மதியழகன் அவர்கள் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் சிறப்புக்களை கூறி, அண்ணலின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய சிறு கையேட்டை வெளியிட த.ச.பேரவையின் து.செயலாளர் தோழர்.நிலவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதைத்தொடர்ந்து தோழர்.செந்தில் அவர்கள் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் "தமிழா நீ பேசுவது தமிழா" என்ற படலை உணர்ச்சி பொங்க பாடினார்கள்.

த.ச.பேரவையின் து.தலைவர் தோழர்.மரு.நலிமுதின் அவர்கள் பாவேந்தர் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட தோழர் செந்தில் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மரு.நலிமுதின் தனது உரையினிடையே பாவேந்தரின் சிறப்புக்களைக்கூறினார்கள்.

அடுத்து, தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் பாவேந்தரின் பெருமைகளை எடுத்துக்கூறி பாவேந்தரின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய கையேட்டினை வெளியிட தோழர்.இரகுமான் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

த.ச.பேரவையின் செயலர் தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் தோழர்.லெனின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய கையேட்டினை வெளியிட விடுதலை சிறுத்தைகளின் செயலாளர் தோழர்.அன்பரசன் அவர்கள் பெற்றுக்கொண்டு கன்னடர்களாலும் அரசியல்வாதிகளாலும் எவ்வாறெல்லாம் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கினார்கள்.

இதை அடுத்து "மறுக்கப்படும் தமிழர் உரிமைகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் காவிரிப் பிரச்சனையிலும் அதைத்தொடர்ந்து தற்போது புகைக்கல் குடிநீர் திட்டத்திலும், கருநாடக வெறியர்களாலும் கருநாடக அரசினாலும், மைய அரசினாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதையும் கருநாகவாழ் தமிழர்கள் உடமைக்கும், உயிருக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் கண்டித்தார்கள். இப்பிரச்சனையில் மைய மாநில அரசுகளின் நியாயமற்ற போக்கினை விளக்கி, இப்பிரச்சனைக்கு விரைவாகவும், நியாயமான முறையிலும் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார்கள்.

த.ச.பேரவையின் து.பொருளாலர் தோழர்.சிவசங்கரன் அவர்கள் பாபாசாகிப் அவர்களை நினைவுகூறும் வகையில் உணர்ச்சிகரமான கவிதை பாடினார்கள்.
காவிரிப்பிரச்சனையில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதையும் அதன் வரலாற்றையும் விளக்கும் கவிதையை தோழர்.நிலவன் அவர்கள் எழுச்சியுற பாடைனார்கள்.

கருத்தரங்க தீர்மானமாக த.ச.பேரவையின் தலைவர் தோழர்.தமிழ்நாடன் அவர்கள் கீழ்கண்ட தீர்மானங்களை முன்மொழிய, அரங்கத்தின் பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானம் 1: புகைக்கல் என்ற பொருள் பொதிந்த தமிழ் பெயரை ஒகேனக்கல் என்று கன்னட பெயரில் அழைக்காமல், புகைக்கல் தமிழ் பெயரை அரசு ஆனைமூலம் மாற்றக் கோருகிறோம்.

தீர்மானம் 2: ஃபுளூரைடு என்ற வேதிப்பொருள் நிறைந்த குடிநீரை ஆண்டாண்டு காலமாக குடித்து பல்வேறு நோய்களுக்குள்ளான இருபெரும் மாவட்டங்களாகிய “தருமபுரி”, “கிருட்டணகிரி” மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், வெளிநாட்டு உதவியோடும் செயல்படுத்த திட்டமிட்ட இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை, எவ்வித அடிப்படை நியாயமுமின்றி
எதிர்த்தும், தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டு வரும் கன்னட
வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

தீர்மானம் 3: கன்னட வெறியர்களின் வன்முறையை கண்டிக்காமலும், தடுக்காமலும் கண்மூடி மௌனமாக இருக்கும் மைய அரசு, கர்நாடக மாநில அரசு, கர்நாடக காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதோடல்லாமல், தொடர்புடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவிவிலக வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 4: தமிழர்களின் உரிமையையும் உணர்வையும் கொச்சைப்படுத்தும் விதமாக, எவ்வித கூடாலோசனையும், நியாயமுமின்றி தன்னிச்சையாக கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த தமிழக முதல்வரை கண்டித்தும், இத்திட்டத்தினை எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உடனடியாக தொடங்க கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 5: இப்பிரச்சனையில் தொடக்கம் முதல் போராடிவரும் தமிழ்
அமைப்புக்களையும் கட்சிகளையும் பாராட்டுவதோடு தொடர்ந்து இத்திட்டம்
நிறைவேறும்வரை போராடவும் வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 6: கர்நாடகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நீண்டகாலமாக பெருமளவு உழைத்துவரும் தமிழர்களை தொடர்ந்து தாக்கியும், அச்சுறுத்தியும் அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அமைதியான வாழ்விற்கும் உறுதியளிக்க வேண்டுமாய் மைய மாநில
அரசுகளை வலியுறுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யவும் வலியுறுத்துகிறோம்.

அடுத்ததாக, கருத்தரங்க தலைவர்.தோழர்.இரா.க.சரவணன் அவர்களின் எழுச்சிமிகு உரைக்குப்பின் த.ச.பேரவையின் பொருளாலர் தோழர்.நாஞ்சில் சுரேசு அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக தோழர்.செந்தில் அவர்களின் எழுச்சிமிகு பாடல் ஒலிக்க, கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்தேசப்பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசனின் "காவிரித்தீர்ப்பும் களவுபோன உரிமையும்" என்ற கட்டுரையும், புகைக்கல் குடிநீர் திட்ட விளக்கக் கட்டுரையும், பாபாசாகேப்பின் இரு உரைகள், சித்திரை-04 திகதி "தென் செய்தி" இதழும், கருத்தரங்க வெளியீடுகள் அனைத்தும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Friday, April 11, 2008

புகைக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கன்னட வெறியர்களை கண்டித்து கண்டணக்கூட்டம்

புகைக்கல் குடிநீர் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெங்களூர் வாழ் தமிழர்களை தொடர்ந்து துன்புறுத்தி வரும் கன்னட வெறியர்களை எதிர்த்து கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 1: புகைக்கல் என்ற பொருள் பொதிந்த தமிழ் பெயரை ஒகேனக்கல் என்று கன்னட பெயரில் அழைக்காமல், புகைக்கல் தமிழ் பெயரை அரசு ஆனைமூலம் மாற்றக் கோருகிறோம்.

தீர்மானம் 2: ஃபுளூரைடு என்ற வேதிப்பொருள் நிறைந்த குடிநீரை ஆண்டாண்டு காலமாக குடித்து பல்வேறு நோய்களுக்குள்ளான இருபெரும் மாவட்டங்களாகிய “தருமபுரி”, “கிருட்டணகிரி” மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், வெளிநாட்டு உதவியோடும் செயல்படுத்த திட்டமிட்ட இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை, எவ்வித அடிப்படை நியாயமுமின்றி எதிர்த்தும், தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டு வரும் கன்னட வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

தீர்மானம் 3: கன்னட வெறியர்களின் வன்முறையை கண்டிக்காமலும், தடுக்காமலும் கண்மூடி மௌனமாக இருக்கும் மைய அரசு, கர்நாடக மாநில அரசு, கர்நாடக காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதோடல்லாமல், தொடர்புடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவிவிலக வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 4: தமிழர்களின் உரிமையையும் உணர்வையும் கொச்சைப்படுத்தும் விதமாக, எவ்வித கூடாலோசனையும், நியாயமுமின்றி தன்னிச்சையாக கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த தமிழக முதல்வரை கண்டித்தும், இத்திட்டத்தினை எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உடனடியாக தொடங்க கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 5: இப்பிரச்சனையில் தொடக்கம் முதல் போராடிவரும் தமிழ் அமைப்புக்களையும் கட்சிகளையும் பாராட்டுவதோடு தொடர்ந்து இத்திட்டம் நிறைவேறும்வரை போராடவும் வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 6: கர்நாடகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நீண்டகாலமாக பெருமளவு உழைத்துவரும் தமிழர்களை தொடர்ந்து தாக்கியும், அச்சுறுத்தியும் அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அமைதியான வாழ்விற்கும் உறுதியளிக்க வேண்டுமாய் மைய மாநில அரசுகளை வலியுறுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யவும் வலியுறுத்துகிறோம்.

Tuesday, April 1, 2008

தமிழ்க்கூடல் - சிறப்புக்கருத்தரங்கம்

தமிழர் சமூகநீதி பேரவையின் இரண்டாவது சிறப்புக்கருத்தரங்கமாகிய "தமிழ்க்கூடல்" திட்டமிட்டபடி பங்குனித்திங்கள் 15ம் நாள் மாலை 0400 மணிக்கு "அயோத்திதாசர் அரங்கில்" சிறப்புடன் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய கூட்டத்திற்கு தலைமையேற்க தோழர்.சிவசங்கரனையும், முன்னிலை வகிக்க தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்களையும், தமிழர் சமூகநீதி பேரவையின் பொதுச்செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் தனது வரவேற்புரையின் போது கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, தோழர்.அமானுல்லா "மார்க்ஸ்" எனும் நூலை வெளியிட தோழர்.வடலூர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டர்கள். இந்நூல் விழாவில் பங்கெடுத்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதையடுத்து தோழர்.வடலூர் ஆறுமுகம் அவ்ர்கள் முன்னிலை உரை ஆற்றினார்கள். தனது உரையில், இத்தகைய அமைப்பின் தேவைகளையும் அது செயலாற்ற வேண்டிய பதையையும் எடுத்துக்கூறினார்கள்.

இவரை அடுத்து தலைமையுரை ஆற்றிய தோழர்.சிவசங்கரன் அவர்கள் அயோத்திதாசரின் வாழ்வையும் பணியையும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தோழர்.வளவன் அவ்ர்கள், "நல்ல தமிழ் நாம் பேசுவோம்" என்ற தலைப்பில், தமிழர்கள் தங்கள் பேச்சிலும் வழக்கத்திலும் எவ்வாறெல்லாம் பிற மொழிகளை பயன்படுத்துகின்றனர் என்பதைக்கூறி, அவற்றிற்காண தூய தமிழ் சொற்களையும் கூறியதோடு தமிழின் பெருமைகளையும் கூறினார்கள்.

அடுத்துப்பேச வந்த தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள், "நிகழ்கால அரசியல்" என்ற தலைப்பில் இன்றைய அரசியல் நிலையையும், தமிழர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

இதன்பிறகு தோழர்கள் திருமுருகன் - இராசகுமாரன் இணையர் வழங்கிய "குவைத் கோணங்கிகள்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர்.வளவனும் தோழர்.செந்திலும் இணைந்து சிறப்பித்தனர்.

அடுத்து, தோழர்.நிலவன் அவர்கள், உணர்ச்சிக்கவிஞர். காசி ஆனந்தனின் இருகவிதையையும் அது விவரிக்கும் வாழ்வியலையும் அழகுற கவிதை நடையில் விளக்கினார்கள்.

குவைத் கோணங்கிகளை அடுத்து தோழர்.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் "சங்க இலக்கியம்" என்ற தலைப்பில் சங்க இலக்கியங்களைக்குறித்தும் அவற்றின் சிறப்புக்களையும் கூறினார்கள்.

தமிழ்க்கூடலின் இறுதிநிகழ்வாக தோழர்.அறிவுமதி இயக்கிய "நீலம்" என்ற குறும்படம் திரையிடப்பட்டது, தோழர்.சித்தார்த் அவர்கள் இப்படத்தினை குறித்த விமர்சனங்களையும் அது கூறும் செய்தியினையும் வழங்கினார்கள்.

இத்தமிழ்க்கூடலின் தொடக்கம் முதல் தோழர்.திருமுருகனின் இசையில் தோழர்கள். இராசகுமாரன், தோழர்.இராமகிருட்டினன், தோழர்.செந்தில், தோழர்.சுப்பிரமணியன் ஆகியோர் எழுச்சிமிக்க பலபாடல்களைப் பாடினர்.

இந்நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும், வைக்கம் முகமது பஷீர், பண்டிதர் அயோத்திதாசர் குறித்த கட்டுரைகளும், சித்தார்த் மொழிபெயர்த்த "இதய தேவி" எனும் வைக்கம் முகமது பஷீரின் சிறுகதையும் வழங்கப்பட்டது.

சிற்றுண்டி பரிமாறியப்பின் மாலை 0630 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Monday, March 31, 2008

தமிழ்க்கூடல் - சிறப்புக்கருத்தரங்க அழைப்பிதழ்


வரலாற்று நாயகர்களின் நிகழ்வும் நினைவும் - சிறப்புக்கருத்தரங்கம் - புகைப்படத்தொகுப்பு

தோழர்.செந்தில், தோழர்.இராசகுமாரன்
பார்வையாளர்களின் ஒரு பகுதி

சிந்தனைச்சிற்பி அமர்வு


சிந்தனைச்சிற்பி அமர்வு


தமிழ்த்தாத்தா உ.வே.சா. அமர்வு

பாவலர் பட்டுக்கோட்டையார் அரங்கம்

வரலாற்று நாயகர்களின் நிகழ்வும் நினைவும் - சிறப்புக்கருத்தரங்கம்

தமிழர் சமூகநீதி பேரவையின் முதலாவது சிறப்புக்கருத்தரங்கமாகிய "வரலாற்று நாயகர்களின் நிகழ்வும் நினைவும்" என்ற நிகழ்ச்சி, தமிழ்த்தாத்தா உ.வே.சா, சிந்தைச்சிற்பி சிங்காரவேலர் ஆகியோரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திருவள்ளுவர் ஆண்டு 2039, மாசித்திங்கள் 14ம் நாளன்று (26.02.2008) மாலை 0600 மணிக்கு நடைபெற்றது.

பாவலர் பட்டுக்கோட்டையார் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்ட அரங்கில் தமிழ் உணர்வாளர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.

தோழர்.தமிழ்நாடன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்க, தோழர்கள்.க.இரகமத்துல்லா, மதியழகன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சி இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. முதல் அமர்வாக "தமிழ்த்தாத்தா உ.வே.சா" வை போற்றும் விதமாக நடந்தது. இவ்வமர்வில்
தோழர்.நிலவனும் தோழர்.பழ.கிருட்டிண்மூர்த்தியும் தமிழ்த்தாத்தவின் சிறப்பியல்புகளையும் பணிகளையும் நினைவூட்டினர்.

முதல் அமர்வு நிறைவுற்றப் பிறகு "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க திருவண்ணாமலை கிளை" தயாரித்து வெளியிட்ட "ஏழுமலை ஜமா" என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வாக "சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்" பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவ்வமர்வில் தோழர்.இரா.க.சரவணனும், தோழர்.திருமுருகனும் சிங்காரவேலரின் சேவையையும் கொள்கைகளையும் எடுத்துக்கூறினர். தோழர்.சிவசங்கரன் அவர்கள் சிந்தனைச்சிற்பியை குறித்த கவிதையை வாசித்தார்கள்.

இன்றைய நிகழ்வின் தொடக்கம் முதல் தோழர்.திருமுருகனின் இசையில் தோழர்.இராசகுமாரன் அவர்கள் நான்கு பாடலை பாடினார்கள். தோழர்.செந்தில் அவர்களின் ஒரு பாடலும் இடம்பெற்றது. இப்பாடல்கள் அனைத்தும் பார்வையாளர்கள் அனைவராலும் மிகவும் பாரட்டப்பட்டது.

இன்றைய கூட்டத்தின் தீர்மாங்களாக பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இன்நிகழ்வின் போது "சிந்தனையாளன்" இதழில் வெளிவந்த "தை முதல்நாளே புத்தாண்டு" என்ற கட்டுரையும், உ.வே.சா, சிங்காரவேலரின் வாழ்க்கை குறிப்புகளும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதியாக தோழர்.அப்துல்கனி அவர்கள் நன்றியுரையாற்ற நிகச்சி இனிதே நிறைவுற்றது.

Tuesday, February 19, 2008

நிகழ்வின் நிழற்படங்கள்




தமிழர் சமூகநீதி பேரவை - குவைத்தில் தோற்றம்

அன்பிற்கினிய தோழர்களே..! எழுச்சிமிக்க வணக்கத்தோடு..!
இப்புலம்லபெயர் மண்ணில் உழைத்து சோர்வோர் இளைப்பாறிட...!
இனிய தமிழோடு பதியமிடும் புதிய வித்தின் நல்முத்துக்களாய்..!
தமிழர் புரட்சி எனும் புதிய பதாகை ஏந்தி இலட்சிய சிந்தனைகளோடும்..!
தமிழையும், கலை-இலக்கியத்தையும், மாற்று சிந்தனைகளோடு..!
மனிதம், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் போற்றப்பட..!
தற்கால சமூக வர்க்க பேதங்களையும்..!
சுயநல சூழ்ச்சிகர அரசியலை உடைத்தெரிந்து..!
பொதுநல புரட்சிகர சிந்தனைகளை நோக்கி..!
அன்னைத்தமிழால் ஒன்றிணையும் முகமாக..!
உலகத்தமிழரிடையே அறிவார்ந்த மாற்று அரசியலை உறுவாக்கிட..!
குவைத் நாட்டில் ஒரு புதிய களம் ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு

தமிழர் சமூகநீதி பேரவை

என பெயரிடப்பட்டது. அமைப்புக்குழுவினரின் முன்னிலையில் 15-02-2008 அன்று இரவு 8-30மணிக்கு மிர்காப் பகுதியிலுள்ள தஞ்சை உணவத்தில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் விவரம் வருமாறு.

தலைவர் - தோழர். தமிழ்நாடன்
துணைத்தலைவர் - தோழர்.வயி.பி.மதியழகன்
பொதுச்செயலாளர் - தோழர். இரா.க. சரவணன்
செயலாளர் - தோழர். கா. இரகமத்துல்லா
துணைச்செயலாளர் - தோழர்.நிலவன்
பொருளாளர் - தோழர்.நாஞ்சில். சுரேசு
சட்ட ஆலோசகர் - தோழர்.நூ. அன்வர்அலி
செய்தி தொடர்பாளர்கள் - தோழர்கள். முனி.சிவசங்கரன், தே. செந்தில்
செயற்குழு உறுப்பினர்கள் - தோழர்.திருமுருகன், அப்துல்கனி, சத்யா, சேந்தை இரவீந்தர்.
அனைத்து நிர்வாகிகளும் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் தோழர். கு.செந்தில்குமார் அவர்கள் புரட்சிப்பா பாடினார்கள். தோழர்.அ.அமானுல்லா அவர்கள் நன்றியுரை வழங்க தேநீர் விருந்தோடு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.